'நொடிப் பொழுதில் பறிபோன நகை'...! பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்...! - விழுப்புரத்தில் பரபரப்பு...!
VillupuramJewelry stolen Mysterious men snatched 4 pound chain from woman
கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது மனைவி கோமதி (45) ஆகியோர், கடந்த 1-ஆம் தேதி வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு இரவு நேரத்தில் காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பயணத்தின் போது, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கம்பியாம்புலியூர் பகுதியில் இரவு சுமார் 9 மணியளவில் சாலையோர தேநீர் கடையில் காரை நிறுத்தி இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்து தேநீர் அருந்தினர்.

தேநீர் அருந்திய பின்னர், அங்கிருந்த கழிவறையை பயன்படுத்துவதற்காக கோமதி தனியாக நடந்து சென்றார். அந்த நேரத்தில், இருளை சாதகமாக பயன்படுத்தி கழிவறை அருகே பதுங்கியிருந்த மர்மநபர், திடீரென கோமதியை நெருங்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை மின்னல் வேகத்தில் பறித்துவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கோமதி, "திருடன்... திருடன்..." என்று உரக்கக் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து மர்மநபரை விரட்டிச் செல்ல முயன்றனர். இருப்பினும், கணநேரத்தில் நகையுடன் தப்பிச் சென்ற அந்த நபரை பிடிக்க முடியவில்லை.
பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த துணிகர சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து கோமதி, விக்கிரவாண்டி காவலர்கள் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், மர்மநபரின் அடையாளத்தை கண்டறிந்து விரைவில் கைது செய்யும் நோக்கில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
VillupuramJewelry stolen Mysterious men snatched 4 pound chain from woman