மாநாட்டு திடலில் அடுத்தடுத்து மயங்கி விழும் தொண்டர்கள் - நடந்தது என்ன?
tvk fans admitted hospital
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மதுரை மாநகரே களைகட்டி உள்ளது. இருப்பினும், வெயிலின் தாக்கத்தல் தொண்டர்கள் அவதியுறும் நிலையில் மாநாட்டை முன்னரே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என்று கூறப்பட்டது, பின்னர் 3 மணிக்கு மாநாடு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னும் சற்று நேரத்தில் இந்த மாநாடு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதுரை பாரபத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வருவதால், வெயிலை சமாளிக்க முடியாமல் தொண்டர்கள் திணறி வருகின்றனர். மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.
தொண்டர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மயக்கம், தலைசுற்றல் வாந்தி உள்ளிட்ட காரணங்களால் 374 பேருக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், உடல் நிலை சீராகாதவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி இதுவரை 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்காக மாநாட்டு திடலின் ஓரத்தில் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தொண்டர்களும் தரை விரிப்புகளை எடுத்து கூடாரம் போல் பிடித்து, நிழலுக்குள் தஞ்சமடைந்து வருகின்றனர். வெயில் கொளுத்தி வரும் நிலையில், தொண்டர்கள் இருக்கும் பகுதிக்கே முதலுதவி பெட்டிகள் ட்ரோன்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
English Summary
tvk fans admitted hospital