ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி...! கோவை, பாலக்காடு நிலைய குடிநீரில் ஆபத்தான 'ஈ-கோலை' பாக்டீரியா...!
Train passengers shocked Dangerous E coli bacteria found drinking water Coimbatore and Palakkad stations
ரயில் நிலையங்களில் தாகம் தீர்க்கும் குடிநீரே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. கோவை, பாலக்காடு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிரூட்டிகள், நடைமேடைகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

ஆய்வு முடிவுகளில், பல்வேறு ரயில் நிலையங்களில் வழங்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கோவை, பாலக்காடு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் ஈ-கோலை எனப்படும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பயணிகளின் நேரடி பயன்பாட்டில் இருக்கும் குடிநீரில் பாக்டீரியா இருப்பது, ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் எந்த அளவுக்கு முறையாக மேற்கொள்ளப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.ரயில்வே விதிமுறைகளின்படி, பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், சில ரயில் நிலையங்களில் பல மாதங்களாக குடிநீரின் தரத்தை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும், பல்வேறு ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் போதிய பராமரிப்பின்றி செயல்படாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால், பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதில் குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து, ரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து சுத்திகரிக்க வேண்டும். செயல்படாமல் இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
அதேபோல், பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை தொடர்ந்து பரிசோதித்து, பாதுகாப்பான குடிநீர் மட்டுமே விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய தென்னக ரயில்வே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Train passengers shocked Dangerous E coli bacteria found drinking water Coimbatore and Palakkad stations