திருநெல்வேலியில் இளைஞர் சரமாரி வெட்டிக் கொலை: தானாக வந்து சிக்கிய குற்றவாளிகள்!
Tirunelveli Youth death Criminals arrested
திருநெல்வேலியில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி, ஆதிச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்து பெருமாள் (வயது 30). இவர் கருங்குளம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார்.
இவர், இன்று காலை இரு சக்கர வாகனத்தில் திருநெல்வேலி, பெருமாள்புரம் ஜான்சன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் இவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த முத்து பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்து பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த மூன்று பேரை போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், தெற்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் இசக்கி பாண்டி என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் முத்துபெருமாள் கொலை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் 2 பேரை கைது செய்ததோடு தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
English Summary
Tirunelveli Youth death Criminals arrested