ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்: வாகன ஓட்டிகள் அவதி!
Tirunelveli people block road protested
திருநெல்வேலி மாநகராட்சி வண்ணாரப்பேட்டை, சேவியர் காலனி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் கடந்த முறை பெய்த கனமழை காரணமாக பல்வேறு வீடுகள் நீரில் மூழ்கியது.
இதனால் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நீரை வெளியேற்ற வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாலும் மீண்டும் காலை முதல் மழை பெய்து வருவதாலும் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அந்த பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று கொண்டிருக்கிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
English Summary
Tirunelveli people block road protested