வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற அம்மன் சிலை; காஞ்சிபுரத்தில் மூவர் கைது; பின்னணியில் உள்ள கும்பல் குறித்து தீவிர விசாரணை..!
Three arrested for trying to smuggle Amman idol abroad in Kanchipuram
கோயிலில் இருந்து அம்மன் சிலையை திருடி வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 03 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் சரக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் உமாராணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மராஜன்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே 03 பேர் தொன்மையான சிலையை பையில் வைத்து கடத்த முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீஸார் சம்பவ இடம் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது அங்கு நின்றிருந்த 03 பேர் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளனர். அவர்களை மடக்கிப்பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் பிடிபட்டவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (33), அதே மாவட்டம் ஆத்தூர் வடபாதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (33), காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் (36) என்பது தெரிய வந்துள்ளது.
இதன்போது விக்னேஷ் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில், 30.5 செ.மீ. உயரம், 16 செ.மீ. அகலம், சுமார் 2.கிலோ 300 கிராம் எடை கொண்ட தொன்மையான உலோக அம்மன் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை அவர்கள் வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டதும் உறுதி செய்யப்பட்டது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின் படி, தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து அந்த சிலை சட்டவிரோதமாக திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து 03 பேரையும் கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததுள்ளனர். மீட்கப்பட்டுள்ள சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது, இதன் பின்னணியில் செயல்படும் சிலை கடத்தல் கும்பல் குறித்தும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
English Summary
Three arrested for trying to smuggle Amman idol abroad in Kanchipuram