தமிழரின் புகழ்... அழகிய இடம்... திருமயம் கோட்டை.!
thirumayam fort
புதுக்கோட்டையில் இருந்து ஏறத்தாழ 21கி.மீ தொலைவிலும், மணப்பாறையில் இருந்து ஏறத்தாழ 71கி.மீ தொலைவிலும், திண்டுக்கலில் இருந்து ஏறத்தாழ 128கி.மீ தொலைவிலும் அமைந்து இன்றும் தமிழரின் புகழை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அழகிய கோட்டைதான் திருமயம் கோட்டை.
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. மேலும் இங்கு ஒற்றைக் கல்லால் ஆன பாறையும் உள்ளது.
தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமயம் கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
இதன் முக்கிய நுழைவு வாயில் தற்போதுள்ள கோட்டையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ளது.
இந்த கோட்டையின் அடிவாரத்தில் சிவபெருமான் மற்றும் விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கு தனித்தனியே அருகருகில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆழ்வார்களால் பாடல்பெற்ற தலம். இங்கே இசை கல்வெட்டுக்கள் உள்ளது.
எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கோட்டையில் பிரம்மாண்ட பீரங்கிகளை வைத்து காத்து வந்துள்ளார்கள். இந்த கோட்டைக்கு உள்ளர் மற்றும் வெளிநாட்டினர் அடிக்கடி சுற்றுலா வந்து செல்கின்றனர்.
திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயில்கள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.
இந்த நுழைவாயில்களில் கோட்டை காவல் தெய்வங்களாக காக்கப்பட்டு வந்தன. வடக்கு வாயிலை பைரவரும், தென்கிழக்கு வாயிலை கருப்பரும், தெற்கு வாயிலை அனுமன், சக்தி கணபதி ஆகிய தெய்வங்களும் காத்து வந்தன. இக்கோவில்களில் இன்றும் வழிபாடுகள் நடந்து வருகிறது.
என்னதான் அரசு தரப்பில் இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது தமிழ் என்று சொன்னாலும் தற்போதும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் சான்றுகள் இன்னும் கூடுதலான ஆண்டுகள் தமிழர்களின் நாகரீகம் பழமையானது என்றே தெளிவுப்படுத்துகிறது.
அக்காலத்து தமிழர்களின் கண்டுபிடிப்புகளும், வாழ்க்கை முறைகளும் இப்போதுள்ள விஞ்ஞானத்தையே மிஞ்சியுள்ளது என்றால் மிகையாகாது.