சிறப்புக்கூறு நிதியை 100 % செலவு செய்யவேண்டும்..அதிகாரிகளுக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தல்!
The special fund must be spent 100%. The governor Kailashnathans instruction to the officials
புதுச்சேரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டு உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
ஆய்வுக் கூட்டத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய செயலர் திரு குடே சீனிவாஸ் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
துறைச் செயலர் டாக்டர் முத்தம்மா துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தில் - 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகையில் 15.7 % அட்டவணை இனத்தவர் உள்ளனர்.
அரசு பட்ஜெட்டில், திட்டசெலவின ஒதுக்கீடு ரூ. 2176 கோடியில் ரூ. 525 கோடி சிறப்பு கூறு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது திட்ட செலவில் 24 % ஆகும். இது நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படி உள்ள 16 % காட்டிலும் கூடுதல் நிதி ஆகும் என்று விளக்கினார்.
மேலும், துறையில் செயல்படுத்தப்படும் 25 நலத் திட்டங்கள் பற்றி விளக்கினார். கடந்த நிதி ஆண்டுகளில் சிறப்பு கூறும் நிதி 91 % செலவு செய்யப்பட்டதும், இந்த ஆண்டு அதை 100% மாக எட்டும் நோக்கத்தில் செயல்பட்டு வருவதையும் எடுத்து கூறினார்.
கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர்,
• இந்த ஆண்டு சிறப்புக்கூறு நிதியை 100 % செலவு செய்வதுடன் அதனை விரைவு படுத்த வேண்டும்.
• துறையின் மூலமாக கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களை, விரைவில் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• மனப்பட்டு மற்றும் திம்ம நாயக்கன் பாளையத்தில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து உள்ள நிலையில் அதனை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு புதுச்சேரி நகரப் பகுதியில் கூடுதலாக தங்கும் விடுதிகள் கட்ட நடவடிக்கை எடுத்க வேண்டும்.
• கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• புதுச்சேரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டு உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், தலைமைச் செயலர் டாக்டர் சரத் சௌகான், துணைநிலை ஆளுநரின் செயலர் டாக்டர் மணிகண்டன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழகம், கேரளா, புதுச்சேரி மண்டல இயக்குநர் ரவிவர்மன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் கலந்த கொண்டனர்.
English Summary
The special fund must be spent 100%. The governor Kailashnathans instruction to the officials