சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு வெளியிடும் கட்சியினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
The Madras High Court has ordered that impartial action be taken against party members who post defamatory content on social media
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிடும் அனைத்துக் கட்சியினருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதன் தலைவர்களையும் களங்கப்படுத்தும் வகையில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளதாக பல்வேறு இணையப் பக்கங்களுக்கு எதிராகவும், வாய்ஸ் ஆஃப் காமன், ரூட், போன்ற அமைப்புகளுக்கு எதிராகவும் பல்வேறு காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட 17 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி, திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் சந்திரபோஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனுவில், தவெக-வினருக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையினர், திமுகவினர் அளித்த புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யாததால், இந்த புகார்களை சிபிஐ-க்கு அனுப்பி நியாயமாக, சுதந்திரமான விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ஆஜரானார்.
அவர், 'விளம்பரத்துக்காக இதுபோல பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன. சமீப காலமாக இந்த மோசமான நடவடிக்கை அதிகரித்துள்ளது. அதனால், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அவதூறு பதிவுகளை நீக்குவது தொடர்பாக விரிவான நடைமுறை வகுக்கப்பட்டு வருவதால், இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும்.' என கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இரண்டு வார கால அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்துள்ளார். அத்துடன், சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிடும், அனைத்துக் கட்சியினருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
English Summary
The Madras High Court has ordered that impartial action be taken against party members who post defamatory content on social media