தேவர் குருபூஜை: வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட தங்கக்கவசம்: பசும்பொன் கொண்டு சென்று சிலைக்கு அணிவித்து பூஜை..!
The golden armor of the Pasumpon Devar idol taken from the bank
இந்தாண்டுக்கான தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலை உள்ளது. அதற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசத்தை வழங்கினார்.
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள தங்கக்கவசத்தை அ.தி.மு.க. பொருளாளர் கையெழுத்து போட்டு எடுத்துக்கொடுப்பது வழக்கம்.
இதனையடுத்து இந்த ஆண்டு தங்கக்கவசத்தை வங்கியில் எடுப்பதற்காக அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேற்று சென்றனர். அங்கு வாங்கி அதிகாரிகள் முன்னிலையில் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும், முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம் சார்பில் காந்தி மீனாளும் கையெழுத்திட்டு தங்கக்கவசத்தை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேவரின் சிலைக்கான தங்கக்கவசம் பசும்பொன்னுக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. தேவர் ஜெயந்தி விழா முடிந்த பின்னர் மீண்டும் தங்கக்கவசம் வங்கியில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு, மக்களின் கோரிக்கையை ஏற்று 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசத்தை ஜெயலலிதா வழங்கினார். தெய்வீகத்தையும், தேசியத்தையும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த தேவரின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவரது உத்தரவின்படி அ.தி.மு.க. நிர்வாகிகளாகிய நாங்கள் அனைவரும் வங்கியில் இருந்து தேவரின் தங்கக்கவசத்தை எடுத்து தற்போது குருபூஜைக்காக வழங்கியுள்ளோம், என்று தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து தங்க கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டு, தேவர்சிலைக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 03 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அங்கு நடந்த பூஜையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அத்துடன், ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கிருத்திகா முனியசாமி, கமுதி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.காளிமுத்து ராஜேந்திரன், கருமலையான், எஸ்.டி.செந்தில்குமார், முனியசாமிபாண்டியன், பம்மனேந்தல் சேகரன், மற்றும் நிர்வாகிகளும் பூஜையில் கலந்துகொண்டனர்,
இந்நிலையில், வருகிற 30-ந் தேதி நடக்கும் தேவர் குருபூஜை நடைபெறவையுள்ளது. அப்போது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பா.ஜனதா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சீமான், செல்வப்பெருந்தகை, வைகோ,ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளனர்.
English Summary
The golden armor of the Pasumpon Devar idol taken from the bank