நடிகர் மோகன்லால் யானை தந்தம் வைத்துக்கொள்ள வழங்கிய உரிமம் ரத்து; கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு..!
Kerala High Court orders cancellation of license granted to actor Mohanlal to possess elephant ivory
மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் வீட்டில், யானை தந்தம் வைத்துக்கொள்ள கேரள அரசு உரிமம் வழங்கி இருந்தது. இதனை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த, 2011, ஆகஸ்ட் மாதம், எர்ணாகுளம் தேவரா பகுதியில் அமைந்துள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வனத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிலிருந்து யானை தந்தம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அப்போது யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமம் மோகன்லாலிடம் இருக்கவில்லை.
பின்னர் கேரள அரசுக்கு மோகன்லால் சமர்ப்பித்த மனுவை தொடர்ந்து, யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை, 2015-இல் மாநில அரசு வழங்கியது. இதை எதிர்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். சுமார் 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கேரள அரசு, 2015-இல் மோகன்லாலுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக அரசின் கெசட்டில் அறிவிப்பு வெளியிடவில்லை என்றும், இது கேரள அரசின் தவறு. எனவே, யானை தந்தம் வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.
English Summary
Kerala High Court orders cancellation of license granted to actor Mohanlal to possess elephant ivory