குஜராத் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
The death toll in the Gujarat bridge collapse accident has risen to 18
குஜராத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகர் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த 900 மீட்டர் நீளப் பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
நேற்று முன்தினம், இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பாலம் வழியாக சென்ற 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
நேற்று மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டதுடன், மொத்த பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னும் இருவர் மாயமாக இருப்பதால், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
என்டிஆர்எப் (NDRF) மற்றும் எஸ்டிஆர்எப் (SDRF) குழுக்கள் ஆற்றில் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதிக சேறும் மழையும் மீட்பு பணிகளை சிக்கலாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சில வாகனங்கள் இன்னும் ஆற்றில் மூழ்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த 4 ஆண்டுகளில் குஜராத்தில் 16 பாலங்கள் இடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி, இந்த விபத்தில் ஊழல் காரணம் எனக் குற்றம்சாட்டி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஜிக்னேஷ் மேவானி கூறுகையில்:“இது பா.ஜ.க ஆட்சியின் ஊழல் விளைவு. இது முதல் முறை அல்ல; கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்துள்ளன.இந்த விபத்துக்கு முதலமைச்சர் பூபேந்திர படேல் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் கடுமையான போராட்டத்தை நடத்தும்,” எனக் கண்டனம் தெரிவித்தார்.
English Summary
The death toll in the Gujarat bridge collapse accident has risen to 18