கோலாகலமாக நடைபெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
The Chariot Festival at the grandly held Thirunallar Shaniswarar Temple: A large crowd of devotees participated
திருநள்ளாறு தர்பார்னேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பார்னேஸ்வரர் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு தினமும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு கடந்த 23ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது விழா நாட்களில் விநாயகர் உற்சவம் சுப்பிரமணிய உற்சவம் அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் வெகு விமரிசியாக நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க, உற்சவர்கள் தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து அங்கு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு காலை தேரோட்டம் தொடங்கியது.
இதையடுத்து சொர்ண கணபதி , சுப்பிரமணியர், பெரிய தேரில் செண்பக தியாகராஜர், நீலோத்பலாம்பாள்,சண்டிகேஸ்வரர் அடுத்து அடுத்து தேர் மாட வீதிகளில் அணிவகுத்து சென்றன. அப்போது கூடி இருந்த திரளான பக்தர்கள், 'தியாகேசா, தியாகேசா' என விண்ணதிர பக்தி கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இந்த தேரோட்ட விழாவில் காரைக்கால், திருநள்ளாறு மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிரம்மோற்சவ விழாவில் நாளை சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், நாளை மறுநாள் தெப்ப உற்சவமும் நடக்கிறது.
English Summary
The Chariot Festival at the grandly held Thirunallar Shaniswarar Temple: A large crowd of devotees participated