ஜெய்பீம் விவகாரம்.. நடிகர் சூர்யாவிற்கு எதிராக இதை செய்தால் அரை பவுன் தங்க காசு.!!
thanjavur vanniyar sangam protest against suriya
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உருவாகிய ஜெய்பீம் திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியானது. பழங்குடியின மக்கள் பொய் வழக்குகளினால் அனுபவிக்கும் இன்னல்களை எடுத்துரைக்கும் படமாக இந்த படம் உள்ளது. ஜெய்பீம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற அளவிற்கு சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் வந்த ஒரு சில காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் வரும் துணை ஆய்வாளர் குருமூர்த்தியின் கதாபாத்திரமும், அவருடைய வீட்டிலிருக்கும் அக்னி கலச காலண்டரும் சர்ச்சையை ஏற்படுத்த முதல் காரணம். இதையடுத்து, சூர்யாவும், ஜோதிகாவும் மன்னிப்பு கோரவேண்டும். நஷ்ட ஈடு 5 கோடி வழங்க வேண்டுமென வன்னியர் சங்கம் சூர்யாவிற்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், ஜெய்பீம் படம் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பேசிய ம க ஸ்டாலின் வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதை பொறுக்க முடியாது.

இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் டிசம்பர் 23-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் வன்னியர் மக்களை திரட்டி அக்னிகுண்டத்தில் நடிகர் சூர்யாவின் படத்தை எரித்து போராட்டம் நடத்துவோம். அப்படி போராட்டம் நடத்துவோருக்கு அக்னி கலசம் படம் பொறித்த அரை பவுன் தங்க காசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
thanjavur vanniyar sangam protest against suriya