திமுக எம்எல்ஏ கார் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு... தஞ்சையில் பெரும் சோகம்!
thanjai farmer killed Thiruvaiyaru DMK MLA car
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நடந்த கோர விபத்தில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) துரை. சந்திரசேகரின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து விவரம்:
ஒரத்தநாடு தென்னமநாடு நடுத்தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). விவசாயியான இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு மகன் உள்ளார்.
இன்று (டிசம்பர் 16) கோவிந்தராஜ், விவசாய வேலைக்காகத் தனது இருசக்கர வாகனத்தில் வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது, தஞ்சாவூரில் இருந்து வந்த, திமுக மத்திய மாவட்டச் செயலாளரும் திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரின் கார் கோவிந்தராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் நடவடிக்கை:
விபத்து குறித்துத் தகவல் அறிந்த ஒரத்தநாடு காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய எம்எல்ஏவின் கார் பறிமுதல் செய்யப்பட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் விபத்திற்குப் பிறகு மற்றொரு காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
thanjai farmer killed Thiruvaiyaru DMK MLA car