டெட் பட்டதாரி ஆசிரியர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி!!
TET graduate teachers negotiations with minister failed
தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யும் என கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
![](https://img.seithipunal.com/media/anbil 02.jpg)
இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 ஆசிரியர் பணியிடங்களுக்கு டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போட்டித் தேர்வானது வரும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் டெட் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
![](https://img.seithipunal.com/media/school teacher-rxtfw.png)
இந்த பேச்சுவார்த்தையின் போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் நடைபெறுவதாகவும், தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடையேயான போட்டித் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியேற்றுள்ள அறிவிப்புக்கு தடை ஆணை பெற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
TET graduate teachers negotiations with minister failed