மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பக்தரின் நகை மாயம்: போலீசார் விசாரணையின் போது கோயில் ஊழியர் உயிரிழந்த சோகம்..!
Temple employee dies during police investigation into missing devotees jewelry
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. நேற்று திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி 73, என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோயில் தற்காலிக ஊழியர் அஜித் 29, என்பவர் அவரை வீல்சேரில் கொண்டு வந்து காரில் சேர்த்துள்ளார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த சிவகாமி மற்றும் அவரது மகள் காரை பார்க் செய்யுமாறு கூறியுள்ளனர்.

அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவரிடம் காரை பார்க் செய்ய சொல்லி சாவியை கொடுத்து பார்க் செய்துள்ளார். பின்னர் சாமி தரிசனம் முடிந்து காரில் கிளம்பும் போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து பவுன் தங்கநகை மாயமாகியுள்ளதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அஜித்திடம் சிவகாமி மற்றும் அவரது மகள் விசாரித்த போது உரிய பதில்சொல்லவில்லை. இதனால் அவர்கள் திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்நிலையில், போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் இன்று கோயில் அருகே வைத்து விசாரணை செய்துள்ளனர்.

அஜித்திடம் போலீசார் விசாரணை செய்த போது, அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அஜித்தின் உடல் சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது மயங்கி விழுந்து அஜித் உருளிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Temple employee dies during police investigation into missing devotees jewelry