நாட்டில் இதுவே முதல்முறை..! 'மொபைல் போன்' செயலியில் வாக்களிப்பு: பீஹார் தேர்தல் ஆணையம் அசத்தல்..!
Bihar Election Commission introduces voting system on mobile phone app
தேர்தல் செயல்முறையில் வாக்களிப்பதற்கு ஒரு புரட்சிகரமான மாற்றமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, வீட்டில் இருந்த படியே அல்லது நாட்டில் எங்கிருந்தாலும் 'மொபைல் போன்' செயலி வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பீஹாரில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தலில் ஓட்டுப்பதிவை எளிமையாக்கவும், அனைவருக்கும் ஓட்டளிக்கும் வாய்ப்பை உறுதி செய்யவும் தலைமை தேர்தல் ஆணையம் சமீபகாலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒரு முயற்சியாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணியருக்கு வீட்டிலிருந்தே ஓட்டளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
ஓட்டுச்சாவடிக்கு வர முடியாதவர்களுக்கு தபால் ஓட்டு முறையைப் பயன்படுத்தி ஓட்டுப்போட உதவியது. இந்த நடைமுறை, கடந்த 2024 லோக்சபா தேர்தல் உள்ளிட்ட பல மாநில தேர்தல்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இது, முதியோருக்கு ஓட்டுரிமையை எளிதாக்கியமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, மற்றுமொரு முயற்சியாக அதுவும் நாட்டிலேயே முதன்முறையாக, 'மொபைல் போன்' செயலி வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யும் வசதியை பீஹாரில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளமை வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து பீஹார் மாநில தேர்தல் ஆணையர் தீபக் கூறியதாவது:
பீஹாரின் பாட்னா, ரோஹ்டாஸ் மற்றும் கிழக்கு சம்பாரன் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஆறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று நடந்த தேர்தல்களில், 'மொபைல் போன்' செயலி வாயிலாக மக்கள் ஓட்டளித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்..
இதன் மூலம் ஓட்டுச்சாவடிக்கு வர முடியாதவர்களுக்கு, குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியருக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பை எளிதாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தல் செயல்முறையை அணுகக்கூடியதாகவும், நவீனமாக மாற்றுவதற்கும் இது ஒரு முக்கிய படி என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக ஓட்டுப்பதிவு முறையை செயல்படுத்துவதற்கு, பீஹார் மாநில தேர்தல் கமிஷன் சார்பில், இ - எஸ்.இ.சி.பி.எச்.ஆர்., என்ற பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் இந்த செயலியை தரவிறக்கம் செய்து, தங்கள் மொபைல் போன் எண்ணைப் பயன்படுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்றும், தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களும் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செயலியில், 'பிளாக்செயின்' எனும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும், முக அடையாள சரிபார்ப்பு முறையையும் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இவை, ஒவ்வொரு ஓட்டும் பாதுகாப்பாகவும், மோசடி இல்லாமலும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ஒரு மொபைல் போன் எண்ணில் இருந்து இரண்டு வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும் என்றும், மேலும் ஒவ்வொரு ஓட்டும் தனிப்பட்ட அடையாளத்துடன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதனால், ஓட்டு மோசடி, இரட்டை ஓட்டுப்பதிவு அல்லது தவறான ஓட்டுப்பதிவு போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும் என்றும், இந்த பாதுகாப்பு அம்சங்கள், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றதாக பீஹார் மாநில தேர்தல் ஆணையர் தீபக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த செயலி வாயிலாக ஓட்டளிப்பதற்கு பீஹார் மாநிலத்தில் ஏற்கனவே, 10,000 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளதாகவும், மேலும், 50,000 வாக்காளர்கள் செயலியில் ஓட்டளிப்பர் என கணித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த நடைமுறை வெற்றியடைந்தால், இந்தாண்டு இறுதியில் பீஹாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும், எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற மொபைல் போன் செயலி ஓட்டுப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Bihar Election Commission introduces voting system on mobile phone app