வருஷக் கணக்கில் சஸ்பென்ஷனா...? இனி அது செல்லாது...! - அரசுத் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு...!
Suspension years It no longer valid High Court gives dramatic verdict government department officials
அரசு ஊழியர்களை விசாரணை என்ற பெயரில் காலவரையின்றி பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க முடியாது என்றும், சட்ட நடைமுறைகளை காலதாமதப்படுத்தி ஒருவரின் பணியுரிமையை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமச்சந்திரன் மீது, பட்டா வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், நீண்டகாலமாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் தன்னை பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது நியாயமற்றது என்றும் கூறி ராமச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் அரசு பணியில் அமர்த்துமாறு அவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "லஞ்ச ஒழிப்பு காவலர்களின் விசாரணை ஏழு மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்துள்ளது.
இருப்பினும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்காக எந்தவித குற்றக்குறிப்பாணையும் வழங்கப்படாத நிலையில், எட்டு மாதங்களுக்கும் மேலாக பணியிடை நீக்கத்தை தொடர்வது சட்டத்திற்கும், நீதிக்கும் முரணானது. ஒருவரை முடிவில்லாமல் இடைநீக்கத்தில் வைத்திருக்க முடியாது" என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், லஞ்ச முறைகேடு தொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியிடை நீக்கம் தொடரப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.இருதரப்பினரின் வாதங்களையும் கவனமாக பரிசீலித்த நீதிபதி பி.டி. ஆஷா, "குற்றவியல் விசாரணையும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் வெவ்வேறானவை.
இரண்டையும் ஒன்றாக இணைத்து பணியிடை நீக்கத்தை காலவரையின்றி தொடர முடியாது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புகளின்படி, அரசு ஊழியரை நீண்டகாலம் இடைநீக்கத்தில் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. விசாரணை என்ற காரணத்தால் மாதக்கணக்கில் பணியிடை நீக்கத்தை நீட்டிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறையாகும்" என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, ராமச்சந்திரன் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அவரை முக்கியத்துவம் குறைந்த அரசு பணியிடத்தில் மீண்டும் அமர்த்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.அரசு ஊழியர்களின் உரிமைகள், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் முக்கிய தீர்ப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Suspension years It no longer valid High Court gives dramatic verdict government department officials