அடக்கொடுமையே...! கைது செய்ய வந்த சப்-இன்ஸ்பெக்டர்! "அவன கௌவு" என வெறிநாயை ஏவிவிட்ட மோசடி தம்பதி...! நடந்தது என்ன...?
sub inspector who came arrest cheating couple who unleashed rabid dog saying Avana Kauvu What happened
கன்னியாகுமரி மாவட்டத்தில் பண மோசடி புகாரைத் தொடர்ந்து தம்பதியரை கைது செய்யச் சென்ற காவலர்களுக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. கைது நடவடிக்கையை தடுக்க வளர்ப்பு நாய் ஏவப்பட்டதில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேல நெய்யூர் சிராயன்விளையைச் சேர்ந்த கிரேட் பிரின்ஸ் ராஜ் (31) ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட பின்னடைவால் குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சினையில் உதவுவதாக உறவினரான கிருஷ்ணவேணி உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் நாகசுமன் மூலம் சட்டரீதியாக சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, தவணை முறையில் ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்து 390 மற்றும் ஒரு காரையும் பெற்றுக்கொண்டு பின்னர் திருப்பி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக கிரேட் பிரின்ஸ் ராஜ் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நாகசுமன் மற்றும் கிருஷ்ணவேணி மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள், இருவரையும் தேடி வந்ததுடன் சம்பந்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், தம்பதியர் தோவாளையில் உள்ள வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆய்வாளர் பச்சைமால் தலைமையிலான காவலர்கள் அங்கு விரைந்தனர். நாகசுமனை கைது செய்ய முயன்றபோது, அவரது மனைவி கிருஷ்ணவேணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், காவலர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது தனது வளர்ப்பு நாயை கிருஷ்ணவேணி ஏவியதாகவும், அந்த நாய் திடீரென சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மீது பாய்ந்து கடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பதற்றமான சூழல் நிலவியது.பின்னர் கூடுதல் பாதுகாப்புடன் செயல்பட்ட காவலர்கள், நாகசுமன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாகசுமன் மீது மதுரை, ஊட்டி, நாங்குநேரி, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பண மோசடி வழக்கில் தேடப்பட்ட தம்பதியரை கைது செய்யச் சென்றபோது, நாயை ஏவி காவல்துறை அதிகாரியை காயப்படுத்திய சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
English Summary
sub inspector who came arrest cheating couple who unleashed rabid dog saying Avana Kauvu What happened