ஆவடியில் நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் : அமைச்சர் நாசர் பார்வையிட்டார்!
Stalins special medical camp for welfare in Avadi Minister Nassar visited
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, ஆவடி சோதனை சாவடி அருகில் உள்ள இம்மாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலை வகித்து முகாமை பார்வையிட்டார்.
முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரத்த பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படும்.இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ, இ.சி.ஜி, எக்ஸ்ரே, கார்டியோகிராம், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள், இந்த முகாமிலேயே மேற்கொள்ளப்படும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 14 ஊரக வட்டாரங்களிலும் 42 முகாம்களும், ஆவடி மாநகராட்சியில் 3 முகாம்கள் என மொத்தம் 45 முகாம்கள் வாரந்தோறும் நடைபெறவுள்ளது. பின்னர் 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர் பொருட்களை தனி சிறப்பாக ஏற்பாடு செய்து வழங்கினர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சதவிகித அடையாள அட்டைக்கான ஆணைகளையும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா,இணை இயக்குனர் (தொற்று நோய்) கிருஷ்ணராஜ், இணை இயக்குனர் (மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள்) அம்பிகா சண்முகம், மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ் (திருவள்ளூர்), மரு.பிரபாகரன் (பூவிருந்தவல்லி), ஆவடி மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு.கதிரவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Stalins special medical camp for welfare in Avadi Minister Nassar visited