கமுதி அருகே பதைபதைக்கும் செய்தி; வேலைக்கு போகாததால் வாக்குவாதம்; மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகன், உடந்தையாக இருந்த மகள் கைது..!
Son in law and daughter arrested for murdering mother inlaw near Kamudi
கமுதி அருகே பீட்டர்புரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் மனைவி வாசுகி (43). இவருக்கு ஹேமா (20), ஹேமலதா(19) என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஹேமா திருமணமாகி கடலாடி அருகே வசித்து வருகிறார். இளைய மகள் ஹேமலதா கடந்த 04 மாதங்களுக்கு முன்பு முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமாரை (23) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் அவர் பொதிகுளத்தில் வசித்து வந்துள்ளார். சில நாட்களாக பீட்டர்புரத்தில் உள்ள தாய் வாசுகி வீட்டில் வசித்து தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் உதயகுமார் தினமும் குடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் இருந்ததை வாசுகி கண்டித்துள்ளார். வழமைபோல நேற்று முன்தினம் இரவு வாசுகிக்கும் மகள் ஹேமலதா, மருமகன் உதயகுமார் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மருமகன் உதயகுமார் வாசுகியை கோடாரியால் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த வாசுகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது தாய் உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளதாக தனது அக்கா ஹேமாவுக்கு ஹேமலதா தகவல் சொல்லியுள்ளார்.
அக்கா ஹேமா வந்து பார்த்த போது தாய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் ஹேமா புகார் அளித்த நிலையில், கொலை செய்த மருமகன் உதயகுமார், உடந்தையாக இருந்த மகள் ஹேமலதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Son in law and daughter arrested for murdering mother inlaw near Kamudi