விபத்து வழக்கில் அதிரடி தீர்ப்பு: காவல் ஆய்வாளருக்கு சிறை தண்டனை...அபராதம் விதித்த நீதிமன்றம்...!
Shocking verdict accident case Police inspector sentenced prison Court imposes fine
புதுக்கோட்டை திருமயம் அருகே கடந்த 2021-ம் ஆண்டு பைக் மீது கார் மோதியதில் தம்பதி காயமடைந்த வழக்கில், காரை ஓட்டி வந்த காவல் ஆய்வாளருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருமயம் தாலுகா ஊனையூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் கார்த்திகேயன்.

இவரது மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி இருவரும் பைக்கில் ஊனையூரில் இருந்து காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.மறிச்சுகட்டு பாலம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.
மோதலின் வேகத்தில் கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். தமிழ்ச்செல்விக்கும் காயம் ஏற்பட்டது.விபத்தை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக இருவரையும் மீட்டு, அவசர ஊர்தி மூலம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், செட்டிநாடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் காரைக்குடி பாரிநகரைச் சேர்ந்த பீட்டர் என்பது தெரியவந்தது. தற்போது இவர் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.இந்த வழக்கு காரைக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வராஜ் ஆஜராகி வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி கார்மேக கண்ணன், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பீட்டருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனால் விபத்து வழக்கில் காவல் ஆய்வாளருக்கு சிறை தண்டனை கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking verdict accident case Police inspector sentenced prison Court imposes fine