சென்னையில் கொடூரம்: சொத்து தகராறில் பல் மருத்துவர் மற்றும் தாய் அடித்துக் கொலை!
Shocking Double Murder in Chennai Dentist and Mother Beaten to Death Over Property Dispute
சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா, தனது இளைய மகனான பல் மருத்துவர் அஷ்ரப் அகமதுவுடன் வசித்து வந்தார். இவருக்கும், மூத்த மகன்களான அஷ்ஷார் அகமது மற்றும் அப்ரார் அகமது ஆகியோருக்கும் இடையே சுமார் ₹1 கோடி மதிப்புள்ள சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சினை நிலவி வந்தது.
நேற்று இரவு இது தொடர்பாக ஏற்பட்ட காரசாரமான மோதலில், ஆத்திரமடைந்த மூத்த சகோதரர்கள் இருவரும் சேர்ந்து தாய் அஷ்ரப் நிஷாவையும், தம்பி அஷ்ரப் அகமதுவையும் சரமாரியாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
கொலை செய்த பிறகு, இருவரும் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறி அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடினர். தகவலறிந்து வந்த அண்ணா நகர் காவல்துறையினர், துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். சடலங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, தாயின் முகத்திலும், தம்பியின் கை, கால்களிலும் கடுமையான காயங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
சந்தேகத்தின் பேரில் சகோதரர்களிடம் நடத்திய அதிரடி விசாரணையில், சொத்து தகராறில் இந்த இரட்டைக் கொலையைச் செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இக்கொலையில் தொடர்பிருக்கலாமா என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking Double Murder in Chennai Dentist and Mother Beaten to Death Over Property Dispute