''Clean and Sustainable Tamil Nadu''; மாற்றம் என்பது ஒரு நாளில் நடக்கக் கூடியது அல்ல. அது ஒரு தொடர்ச்சியான பயணம்; அண்ணாமலை அறிக்கை..!
Change cannot happen in a day says Annamalai
''சமீபத்தில் நேபாளத்தில் பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம், இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகைய பேரிடர்களை உருவாக்கக்கூடும் என்பதையும், அவற்றின் தீவிரத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது சிறந்த எதிர்காலத்துக்கான முன்னெடுப்பு மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது தலையாய பொறுப்பும்கூட.'' என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது;
''சமூகத்தின் நலனுக்காகவும், நமது எதிர்காலத் தலைமுறைகளின் நலனுக்காகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னலமற்ற முறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் அனைத்து தலைவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் என்பது ஒரு நாளில் நடக்கக் கூடியது அல்ல. அது ஒரு தொடர்ச்சியான பயணம். சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உங்கள் விடுமுறை நாட்கள், ஓய்வு நேரங்களை எல்லாம், நமது அமைப்பின் பணிகளுக்காக நீங்கள் செலவிட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
“Clean and Sustainable Tamil Nadu” என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதம் என்ற நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1400-க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்ச்சிகளை நாம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம்.
பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள், கழிவுகளை முறையாகப் பிரித்தல், மரக்கன்றுகள் நடுதல், பசுமைப் பணிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், நமது சகோதர, சகோதரிகள் தொடர்ந்து இந்தப் பணிகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இன்று வரை தமிழகம் முழுவதுமாக 175 டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். 8 லட்சத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை மாநிலம் முழுவதும் நட்டுள்ளோம். பல இடங்களில் ஆரம்பித்த பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதும், மேலும் இவை தொடர்பாக மக்கள் வைத்துள்ள கோரிக்கைகள் மூலம் புதிதாகக் கண்டறிந்துள்ள பணிகளையும் நிறைவேற்றுவதும் அவசியம்.
சில திட்டங்களுக்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளைப் பெறுவதில் எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.
இந்தப் பணிகளை அவசர அவசரமாக முடிப்பதைவிட, அவை திட்டமிட்டபடி முழுமையாக நிறைவேற்றப்பட்டு, அதன் பலன் அந்தப் பகுதிகளுக்கும், மக்களுக்கும் நீண்ட காலத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.
சமீபத்தில் நேபாளத்தில் பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம், இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகைய பேரிடர்களை உருவாக்கக்கூடும் என்பதையும், அவற்றின் தீவிரத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது சிறந்த எதிர்காலத்துக்கான முன்னெடுப்பு மட்டுமல்ல; எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது தலையாய பொறுப்பும்கூட.
எனவே, நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் ஒவ்வொரு தலைவரும் மேற்கொண்ட தன்னலமற்ற உழைப்பிற்கும், முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், “Clean and Sustainable Tamil Nadu” பிரச்சாரத்தை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறோம்.
ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பணிகளை முழுமையாக நிறைவேற்றி, நாம் எடுத்துக்கொண்ட இலக்கை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்வதே நமது உழைப்பின் உண்மையான வெற்றியாகும். எனவே செப்டம்பர் மாத இறுதி வரை, நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
செப்டம்பர் மாதத்திற்கான, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த நமது சமூகப் பணிகள், அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Change cannot happen in a day says Annamalai