சிங்கப்பெண் திட்ட விழாவில் அதிர்ச்சி...! பெண் காவலரின் 1.5 சவரன் நகை மற்றும் பணம் மாயம்...! - ஆவடி காவலர்கள் தீவிர விசாரணை...!
Shock Lioness Project ceremony Female police officer 1point5 sovereigns jewelry and money missing Avadi police investigating intensively
சிங்கப்பெண் திட்ட தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த பெண் காவலரின் நகை மற்றும் பணம் அடங்கிய பை மர்மமாக காணாமல் போன சம்பவம் ஆவடி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கிருபா (25), சென்னை கிண்டி ஆயுதப்படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த சிங்கப்பெண் திட்ட நிகழ்வின் அணிவகுப்பில் பங்கேற்பதற்காக கடந்த 9-ஆம் தேதி ஆவடி சிறப்பு காவல் படை 2-ஆம் அணி மைதானத்திற்கு அவர் வந்திருந்தார்.
அங்கு சக காவலரான சண்முகப்பிரியாவுடன் தங்கி பயிற்சிகளில் ஈடுபட்ட கிருபா, நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பத் தயாரானார்.
அப்போது தனது பயணப் பையை ராஜரத்தினம் விளையாட்டரங்கத்திற்கு கொண்டு வந்து காவலர் வாகனத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு சண்முகப்பிரியாவிடம் கிருபா கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சண்முகப்பிரியா பையை எடுத்துச் சென்று வாகனத்தில் வைத்துள்ளார்.
ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது, அந்தப் பை காணாமல் போயிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். மாயமான பையில் ஒன்றரை சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,500 ரொக்கப் பணம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக கிருபா துணை ஆணையர் அலுவலகத்தில் முறையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து அவர் ஆவடி காவலர்களிடம் தனிப்பட்ட புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், பை எவ்வாறு மாயமானது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Shock Lioness Project ceremony Female police officer 1point5 sovereigns jewelry and money missing Avadi police investigating intensively