சென்னை மின்சார ரயில் சேவைகள் திடீரென ரத்து; தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!
Selva Perundakai condemns the sudden cancellation of Chennai Electric Train services
மக்களின் அன்றாட பயணத்தை பாதிக்கும் வகையில், சென்னை புறநகர் ரயில் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளமை மிகுந்த கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: "தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் சென்னை மின்சார ரயில் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளமை மிகுந்த கண்டனத்திற்குரியது.
தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் புறநகர் ரயில் சேவைகளை நம்பியே தங்கள் அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் போதுமான முன் அறிவிப்பின்றி சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது மக்களுக்கு கடும் சிரமத்தையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொது போக்குவரத்து என்பது மக்களின் அடிப்படை தேவையாகும். இதனை சீராகவும் தடையின்றியும் வழங்குவது ரயில்வே நிர்வாகத்தின் கடமையாகும். மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் சேவைகளை நிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட பயணத்தை பாதிக்கும் வகையில் ரயில் சேவைகளை குறைத்துள்ளது, பயணிகளின் நேரத்தையும், வருமானத்தையும் வீணாக்குவதாக உள்ளது.
ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில் சேவைகளை உடனடியாக மீண்டும் இயக்க வேண்டும். சேவை ரத்து குறித்து முன்கூட்டியே தெளிவான அறிவிப்புகள் வழங்க வேண்டும். பயணிகள் சிரமப்படாத வகையில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.
பயணிகளின் நலன் கருதி, ரயில் சேவைகளை விரைவில் சீரமைக்கவும் ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன் '' என தெரிவித்துள்ளார்.
English Summary
Selva Perundakai condemns the sudden cancellation of Chennai Electric Train services