புரட்டாதி பௌர்ணமி: திருச்செந்தூர் கோவில் பகுதியில் 60 அடி உள்வாங்கிய கடல் நீர்..!
Sea water intruded 60 feet in the Tiruchendur temple area
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இன்று புரட்டாதி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள் வாங்கியுள்ளது.
ஆனாலும், கோவிலுக்கு சென்ற பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடியுள்ளனர். ஏனனில் திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். அதன்படி, பக்தர்கள் இன்று அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக கடலில் புனித நீராடியதோடு, சுவாமி தரிசனமும் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் உள்ள கடற்கரை பகுதிகளில் வழக்கமாக தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில் கடல் நீர் மட்டத்தில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். இந்நிலையில் இன்று (திங்கள்) பகல் 11.42 மணி மணி முதல் நாளை காலை 09.50 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது.
இதன் காரணமாக திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே இன்று காலை கடல் நீரானது சுமார் 60 அடி உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் பாசி படர்ந்த படி பச்சை நிறத்தில் பாறைகள் வெளியே தெரிந்துள்ளது. ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடி, உள்வாங்கிய பாறைகளை செல்போனில் படமும் எடுத்து மகிழந்ததோடு, முருகனையும் தரிசித்துள்ளனர்.
English Summary
Sea water intruded 60 feet in the Tiruchendur temple area