கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்.. தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!
Scheme of giving Rs.1000 to college girls Tamil Nadu Government guidelines
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவிகள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 7 ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக 698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது விண்ணப்பிக்கும் மாணவிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.
அரசுப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முடித்து டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
வேறு மாநிலத்தில் இருந்து எல்லை தாண்டி வந்து படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
உயர்கல்வி என்றால் கலை மற்றும் அறிவியல், தொழிற்கல்வி படிப்புகள், பாராமெடிக்கல், பட்டயம், ஐடிஐ, ஒருங்கிணைந்த முதுநிலைக் கல்வி என அனைத்துக்கும் பொருந்தும்.
முதல் உயர்கல்விக்கு மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ஒருங்கிணைந்த முதுநிலைக் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலைக் கல்வியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயின்றால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள், ஐடிஐ சான்றிதழ் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 3 ஆண்டுகள், பொறியியல் படிப்புக்கு 4 ஆண்டுகள், வேளாண் படிப்புகளுக்கு 4 ஆண்டுகள், மருத்துவப் படிப்புக்கு 5 ஆண்டுகள், சட்டம் மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறமுடியும்.
அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவிகளில் யார் உயர்கல்வி பயில்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகையை பெற ஆதார் எண் கட்டாயம்.
பயன்பெற விரும்பும் தகுதியான மாணவிகள், தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம் அல்லது கல்லூரி வாயிலாக பதிவு செய்யலாம். இத்திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆன்லைன் மூலம் தகவல்களை பதிவு செய்யலாம்.
English Summary
Scheme of giving Rs.1000 to college girls Tamil Nadu Government guidelines