அதிமுகவில் ‘சதி நரி’ விவகாரம் – செங்கோட்டையன் மட்டுமல்ல SP வேலுமணியை காலி செய்ய திட்டம்! பரபரப்பை கிளப்பிய கே.சி.பழனிசாமி!
Sathi Nari affair in AIADMK not only Sengottaiyan but also a plan to vacate SP Velumani KC Palaniswami created a stir
அதிமுக உள்கட்சிப் பிரச்சாரத்தில் புதிய பரபரப்பு வெடித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுகவின் மூத்த தலைவருமான கே.சி.பழனிசாமி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அவர் தனது பதிவில், அதிமுகவில் ஒரு “சாதி வெறி பிடித்த நரி” தொடர்ந்து இயக்கத்தின் ஒற்றுமையை சிதைக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அந்த நரி எடப்பாடி பழனிசாமியை தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு, அதிகாரப் போதையில் உசுப்பேற்றி, செங்கோட்டையன் போன்ற சீனியர்களை வீழ்த்தி வருவதாக கடுமையாக தாக்கியுள்ளார்.
பழனிசாமியின் குற்றச்சாட்டில் முக்கிய அம்சங்கள்:
அம்மா காலம்: சாதி வெறியன் எனக் குற்றம் சாட்டப்பட்ட அந்த நரி, ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அப்போது புறக்கணிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
OPS-ஐ முன்னிறுத்தல்: ஜெயலலிதா மறைவுக்குப் பின், OPS-ஐ முதலமைச்சரும் கட்சித் தலைவருமாக முன்னிறுத்தும் சதி திட்டத்தை தீட்டி, அதிமுகவில் முதல் பிளவை உருவாக்கியது என்றும் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
முக்குலத்து சமுதாயம் மீதான பழிவாங்கும் நோக்கம்: அந்த நரி, முக்குலத்து சமூகத்துக்கு எதிராக பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்பட்டதாகவும், இதனால் பல மூத்த தலைவர்கள் பின்தள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
சீனியர்களை பின்தள்ளல்: OPS-இபிஎஸ் இணையும் தருணத்திலும் அந்த நரி சதி விளையாட்டுகளின் மூலம் பல சீனியர்களை பின்தள்ளியதாகவும், தனது அரசியல் முன்னேற்றத்துக்காக பலரை ஒதுக்கியதாகவும் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
எடப்பாடி மீது அதிகார போதை: எடப்பாடியை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று ஆக்குவேன் எனக் கூறி தொடர்ந்து உசுப்பேற்றி, அதிகார போதை ஊட்டி தன் வசப்படுத்திக் கொண்டு வருவதாகவும் அவர் சாடினார்.
விஜய்யை முன்னிறுத்தும் சதி: இறுதியாக, அந்த நரி அமித்ஷா – எடப்பாடி மோதலை உருவாக்கி, எடப்பாடியை முடித்து வைத்து, நடிகர் விஜய்யை அதிமுக மூலமாக முதல்வராக முன்னிறுத்தும் சதிவலை தீட்டுவதாகவும் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
இந்த பதிவின் பின்னர், “அந்த நரி யார்?” என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. பல நெட்டிசன்கள், பழனிசாமி குற்றம்சாட்டியவர் அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி என பதிவிட்டு வருகின்றனர்.
இதனால், ஏற்கனவே உள்கட்டமைப்பு சிக்கல்களில் சிக்கியுள்ள அதிமுகவில், கே.சி.பழனிசாமியின் இந்த அதிரடி குற்றச்சாட்டு கட்சியின் உள்ளகத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
English Summary
Sathi Nari affair in AIADMK not only Sengottaiyan but also a plan to vacate SP Velumani KC Palaniswami created a stir