மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை! மாஃபியா போல் செயல்படுகிறது – புகார் அளிப்பவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு! ஹைகோர்ட் அதிரடி
Sand and mineral resource theft Acting like mafia Police protection for those who file complaints High Court takes action
அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை கும்பல் மாஃபியா போல் செயல்படுவதாக கடுமையாக சாடிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த சட்டவிரோத கொள்ளை குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதனைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புவியியல் மற்றும் கனிம வளத்துறை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் அடுத்தாண்டு மார்ச் 31க்குள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2020 முதல் 2025 நவம்பர் வரை 1439 சட்டவிரோத குவாரிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய நீதிபதிகள், எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினர். ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சட்டவிரோதமாக கனிம வளம் கொள்ளையடிக்கப்படும் நிலையில், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதில் என்ன பயன் உள்ளது என்றும் கடுமையாக சாடினர்.
உத்தரவில், மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையைத் தடுப்பது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு என தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து புகார் அளிக்காத வருவாய் துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். அதேபோல், மணல் மற்றும் கனிம வளக்கொள்ளை குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக்கொள்ளையை கட்டுப்படுத்த திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
English Summary
Sand and mineral resource theft Acting like mafia Police protection for those who file complaints High Court takes action