ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா:ராமேசுவரம் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Ramalinga Prathishta Festival Many devotees participate at the Rameshwaram temple
ராமேசுவரம் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் சுவாமி-அம்பாள், ராமபிரான் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
உலகப்பிரசித்திபெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தல வரலாற்றை விளக்கும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. திருவிழாவில் முதல் நாளில் ராவண சம்ஹார நிகழ்ச்சியும், 2-வது நாளில் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கும் ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 3-வது நாளான நேற்று கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா விமரிசையாக நடைபெற்றது . முன்னதாக விசுவநாதனர் சன்னதி எதிரே புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு கலச பூஜை செய்யப்பட்டு பின்னர் சாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி கொண்டுவரப்பட்டு கருவறையில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசுவநாதர் சன்னதியில் இருந்து கோவில் குருக்கள் சந்தோஷ் முகம் முழுவதும் செந்தூரம் பூசி ஆஞ்சநேயர் சாமி விக்ரகத்தை தோளில் சுமந்தபடி சுவாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி ஆடி வலம் வந்தார். தொடர்ந்து அங்கு ராமநாதசுவாமிக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடந்தன. நேற்று இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள், ராமபிரான் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Ramalinga Prathishta Festival Many devotees participate at the Rameshwaram temple