மழைக்காலங்களில் போலியான தகவலை பரப்ப வேண்டாம்.. இராசபாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை எச்சரிக்கை.!
Rajapalayam Police Warn About Fake Message Sharing about Rakatchiyamman kovil flood 13 Persons Death
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில், இராக்காட்சியம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில்களை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சிறிய அருவிகள் மற்றும் ஆறுகள் உள்ளது. இப்பகுதியில் விடுமுறை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் சென்று குளித்து வருவது வழக்கமான ஒன்றாகும்.
மழைநேரங்களில் இப்பகுதியில் வெள்ளம் ஆட்பறித்து செல்லும். மழைக்கால துவக்கமாக தற்போது தமிழகத்திற்கு இருந்து வரும் நிலையில், இராசபாளையம் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதிகளில் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் இராக்காட்சியம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் ஆறுகள், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து உள்ளூர் மக்கள் அப்பகுதிகளுக்கு சென்று ஆனந்த குளியல் போட்டு வந்து கொண்டு இருந்தனர். மழைக்காலங்களில் ஆறுகள் மற்றும் அருவிகளில் எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கு பிரச்சனை இருக்கும். இப்பகுதியிலும் அவ்வப்போது மக்கள் வெள்ளத்தில் சிக்கி, பின்னர் தீயணைப்பு படையினரால் மீட்டு வரப்படும் சம்பவங்கள் நடைபெற்றதுண்டு.
அந்த வகையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக இராக்காட்சியம்மன் கோவிலுக்கு அருகேயுள்ள சிறிய அருவியில் உள்ளூர் மக்கள் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மலை மேலே பெய்த மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்து வெயியேறினர். அங்கு சிக்கிக்கொண்ட நபர்களை தீயணைப்பு படையினர் மீட்டு வந்தனர்.
இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இது குறித்த வீடியோ வெளியாகியிருந்த நிலையில், நேற்று இராசபாளையம் உள்ளூர் மக்கள் வாட்சப் குழுவில் மேற்கூறிய விடியோவை வைத்து, அங்கு சென்ற 13 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர் என்றும், இதில் பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் சென்று இருந்தார்கள் என்றும், அதில் 2 பேரின் சடலம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ளவர்கள் உடலை தேடி வருகின்றனர் என்ற தகவலும் வைரலாக பரவியது.
இதனால் உள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த விஷயம் தொடர்பாக இராசபாளையம் தெற்கு காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர்களுக்கே இது பெரும் அதிர்ச்சி செய்தியாக இருந்துள்ளது. பின்னர் விபரத்தை சேகரித்து உண்மை நிலவரத்தை தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக உள்ளூர் வாசிகள் அப்பகுதிக்கு சென்று குளிக்கும் போது ஆற்றில் வெள்ளம் அதிகரித்து, தீயணைப்பு படையினரின் உதவியுடன் மக்கள் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர். அங்கு யாரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியாகவில்லை. போலியான தகவல் பரவி வருவதாக விளக்கம் அளித்தனர். மேலும், பேரிடர் காலங்கள், மழை காலங்களில் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் போலியான செய்திகளை பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பேரிடர் காலங்களில் போலியான தகவலை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலைப்பகுதிகளில் உள்ள அடிவாரத்தில் அமைந்துள்ள ஆறுகள் மற்றும் அருவிகளை பொறுத்த வரையில், மேலே உள்ள மலைப்பகுதியில் 2 மணிநேரம் மழை பெய்து முடித்த பின்னரே கீழே வெள்ளம் வரும். மேலே உள்ள மழையில் மழை பெய்வது போல தோன்றும் பட்சத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு வருவது நல்லது. மாற்றாக மேலே தானே மழை பெய்கிறது என்று எண்ணினால், வீணாக அங்கு சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Rajapalayam Police Warn About Fake Message Sharing about Rakatchiyamman kovil flood 13 Persons Death