போலியோ இல்லாத தமிழ்நாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
Polio-free Tamil Nadu Minister Ma Subramanian expresses pride
21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
6 மாவட்டங்களில் நடைபெற்ற போலியோ’ சொட்டு மருந்து சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-2012-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு ‘போலியோ வைரஸ் பரவல் கொண்ட தொற்றுநோய் நாடுகள்’ பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி, 2014-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி அன்று ‘போலியோ’ பாதிப்பில் இருந்து விடுபட்ட நாடாக இந்தியாவுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
‘போலியோ’ தடுப்பூசி முயற்சிகள் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெறுவதால், தமிழ்நாடு கடந்த 21 ஆண்டுகளாக ‘போலியோ’ இல்லாத மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் இறுதியாக கடந்த 2004-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் போலியோ நோய் கண்டறியப்பட்டது.
இந்திய அளவில் மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் கடந்த 2011-ம் ஆண்டு ‘போலியோ’ வைரஸ் இறுதியாக கண்டறியப்பட்டது. ஆக 11 ஆண்டுகள் இந்தியா முழுமைக்கும் போலியோ இல்லாத நாடாக இருந்து வருகிறது. 21 ஆண்டுகள் தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து சிறப்பு போலியோ சொட்டு மருந்து தினம் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது 6 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 91 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இம்மையங்களில் 7.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Polio-free Tamil Nadu Minister Ma Subramanian expresses pride