மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது: திமுக ஆட்சியில் பள்ளிகள் கூட குழந்தைகளுக்கு பாதுகாப்பானவையாக இல்லை - அன்புமணி இராமதாஸ்!
pmk anbumani ramadoss condemn to dmk mk stalin govt
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பி. பாலசுப்பிரமணியன் என்ற ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசு பள்ளிக்கூடங்களைக் கூட மாணவிகளுக்கு பாதுகாப்பாற்றவையாக திமுக அரசு மாற்றி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏராளமான மாணவிகள் புகார் செய்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தான் சூனியக்காரன் என்றும், தமது விருப்பத்திற்கு உட்படாவிட்டால் பேயை ஏவி விடுவேன் என்றும் மிரட்டி பல குழந்தைகளை அந்த ஆசிரியர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
தாய், தந்தை ஆகியோருக்கு அடுத்தபடியாக கடவுளாக மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுத் தர வேண்டியவர்களும் அவர்கள் தான். ஆனால், கடவுளாக பார்க்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே தன்னை சாத்தான் என்று கூறிக் கொண்டு குழந்தைகளை பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கியிருக்கிறார் என்றால் அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு ஆபத்தானவையாக மாறியிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இதே போன்ற செயல்களில் அவர் மீது சூரமங்கலம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வளவு மோசமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரை மாணவிகள் பயிலும் பள்ளிக்கு ஆசிரியராக திமுக அரசு நியமித்திருக்கிறது என்பதிலிருந்தே மாணவர் நலனில் அதற்கு அக்கறை இல்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் திமுக அரசு எப்போது பதவி ஏற்றதோ, அப்போதிலிருந்தே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் 2020-ஆம் ஆண்டில் 3057 வழக்குகள் பதிவாகியிருந்தன. அது 2021-ஆம் ஆண்டில் 4,415, 2022-ஆம் ஆண்டில் 4,906, 2023ஆம் ஆண்டில் 4581, 2024-ஆம் ஆண்டில் 6975, 2025-ஆம் ஆண்டில் 7000 ஆக அதிகரித்திருக்கிறது. 2020-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 3943 , அதாவது 129% அதிகம் ஆகும்.
2021&ஆம் ஆண்டில் 422 பெண்கள், 2022&ஆம் ஆண்டில் 421, 2023&ஆம் ஆண்டில் 365 பெண்கள், அதற்கடுத்த இரு ஆண்டுகளில் 813 பெண்கள் என மொத்தம் 2021 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எண்ணிக்கை 44,418. அதாவது ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக 25 குற்றங்கள் தமிழ்நாட்டில் நடக்கின்றன.
இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்த்துகின்றன. திமுக ஆட்சியில் இருக்கும் வரை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பது தான் அந்த உண்மை. தமிழ்நாட்டு மக்களும் அதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால், இன்னும் 13 நாள்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளித்து விரட்டியடிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
pmk anbumani ramadoss condemn to dmk mk stalin govt