'அனுபவம் மிக்க தலைவர் நிதிஷ்குமார்'...! - மாநிலங்களவை பதவியேற்புக்கு மோடி பாராட்டு மழை...!
Nitish Kumar experienced leader Modi showered with praises on his swearing Rajya Sabha
பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய மாற்றங்களின் மத்தியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார், மாநிலங்களவை அரசியலுக்கு புதிய திருப்பம் கொடுத்துள்ளார்.
முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த அவர், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அடுத்த கட்ட அரசியல் நகர்வைத் தொடங்கியிருந்தார்.
இதனால் அவர் பதவியை விலகுவார் என்ற தகவல் வெளியாகியதும், கட்சிக்குள் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. தொண்டர்கள் பலரும் அவர் முதல்வர் பதவியை தொடர வேண்டும் என வலியுறுத்திய நிலையில், எம்.எல்.சி. பதவியிலிருந்து விலகி புதிய முடிவை எடுத்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரசியல் பரபரப்பின் தொடர்ச்சியாக, நிதிஷ்குமார் இன்று மாநிலங்களவை உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார். மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் முன்னிலையில், நிதிஷ்குமார் இந்தி மொழியில் பதவியேற்றது கவனிக்கத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு, நிதிஷ்குமாரின் அரசியல் அனுபவத்தையும், நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார். நாட்டின் மிகுந்த அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான அவர், பீகாரின் வளர்ச்சியில் அழியாத தடம் பதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாராளுமன்றத்தில் மீண்டும் அவரை காணும் வாய்ப்பு பெருமகிழ்ச்சியை அளிப்பதாகவும், அவரது நீண்டகால அரசியல் அனுபவம் பாராளுமன்றத்தின் தரத்தை மேலும் உயர்த்தும் என முழு நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை அவர் தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Nitish Kumar experienced leader Modi showered with praises on his swearing Rajya Sabha