நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுக்கு தடை: மீறினால் கடும் நடவடிக்கை: நெல்லை மாநகர காவல் எச்சரிக்கை..!
Nellai Municipal Police warns of strict action if caste symbols are brought to the Nellaiappar Temple procession
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா வருடம்தோறும் ஆனி மாதம் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா தேரோட்டம் வருகிற 08-ஆம் இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில், நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நெல்லையப்பர் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது என நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் ஜாதி ரீதியான கொடிகள், பனியன்கள் அணிந்து வருவதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்தாண்டில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டும் அதேபோல் ஏதாவது செயல்பாடுகள் இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படும் என்றும், தேரோட்டத்திற்கு வருவோர் ஜாதி சம்பந்தமான பனியன், கொடிகள், பேண்டுகள் அணிந்து வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தேரோட்டத்திற்கு 1500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
Nellai Municipal Police warns of strict action if caste symbols are brought to the Nellaiappar Temple procession