பத்து வருசமா வேலை செய்யாததால் தான் இவ்வளவு பிரச்சனை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.!
near chennai minister kn nehru press meet
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29 தேதி முதல் வடகிழக்குப் பருவமழை துவங்கியதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போன்று தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து மழைநீரை அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது, “சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பல இடங்களில் இருந்த தண்ணீரை அகற்றி விட்டார்கள். நேற்று இரவு மீண்டும் பல இடங்களில் மழை பெய்தது. ஊழியர்கள் அப்போது தேங்கிய நீரையும் மோட்டார் வைத்து முழுவதுமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரை அகற்றிய பின்பு அபகுதியில் இருக்கும் சேறும் அகற்றப்பட்டு வருகிறது.
இதையடுத்து, திமுக சார்பில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியம், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் நான் உட்பட அனைவரும் துவங்கி உள்ளோம். அந்தவகையில், இன்று நான்கு இடங்களில் மிக பெரிய அளவில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
சென்னையில், தண்ணீர் தேங்கினால் அகற்ற வேண்டும் என்று சொன்னீர்கள். தற்போது அந்த வேலையும் முடிந்து விட்டது. இதன் பின்னர் மழைக்காலம் முடிந்ததும் சென்னையில் உள்ள சாலைகளைச் சீரமைக்கும் பணிக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மழைக்காலம் முடிந்ததும் சாலைகள் முழுவதுமாக சீரமைக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுக்காலம் அவர்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால், சென்ற வருடம் ஏன் சென்னை அவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கப் போகிறது. ஒரு இடத்தில் கூட அவர்கள் தூர்வாரும் பணியைச் செய்யவில்லை. இப்போதுள்ள முதல்வர் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்ததால் மட்டும்தான் கால்வாய்களை தூர்வார முடிந்தது. மத்திய சென்னை மற்றும் தென் சென்னை போன்ற பகுதிகளில் தண்ணீர் அறவே தேங்கவில்லை. அதிமுக சீரமைப்பு பணியை நன்றாகச் செய்திருந்தால் கடந்த ஆண்டு ஏன் தண்ணீர் தேங்க வேண்டும். அது அவர்களுக்கு தெரியாதா?
சென்னை முதலைச்சர் தொகுதி கொளத்தூர் கன்னித்தீவு மாதிரி இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்லுகிறார். முதல்வர் நொடிக்கு நொடி கொளத்தூரை கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார். அதன் மூலம் ஜெயக்குமார் தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறார். அதிமுக எதுவும் செய்யாததால் தான் தண்ணீர் நின்றது. நாங்கள் வேலை செய்ததால் தான் தண்ணீர் வடிந்து விட்டது. ஜெயக்குமார் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
near chennai minister kn nehru press meet