புதிதாக திறக்கப்பட்ட மதுரை வெளிவட்ட சாலையில் சுங்க கட்டணம் உயர்வு; வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சி..!
Motorists shocked by toll hike on newly opened Madurai Outer Ring Road
மதுரை-திண்டுக்கல், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.1,024 கோடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாடிப்பட்டி-தாமரைப்பட்டி இடையே மதுரை வெளிவட்டச் சாலை 29.960 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அலங்காநல்லூர் அருகே இலவன்குளத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலை ஜூலை 15-ஆம் தேதி முதல் பயன் பாட்டு்க்கு திறக்கப்பட்டது. அன்று முதலே சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூலை 22-ஆம் தேதி முதல் இலவன்குளம் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்தி இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கார், ஜீப், வேன் போன்ற இலகு ரக வாகனம் ஒருமுறை பயணிக்க புதிய கட்டணமாக ரூ.60 (பழைய கட்டணம்-ரூ.55), 24 மணி நேரத்துக்குள் திரும்பிவர ரூ.90 (ரூ.85), ஒரு மாதத்துக்கு 50 தடவைகள் பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கட்டணம் ரூ.1,950 (ரூ.1,895), இலகுரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பஸ் ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.95 (ரூ.90), மாதாந்திர கட்டணம் ரூ.3,155 (ரூ.3,060), பஸ் அல்லது டிரக் (2 அச்சுகள்) ஒருமுறை பயணிக்க கட்டணம் ரூ.200 (ரூ.190), 24 மணி நேரத்துக்குள் திரும்பவர கட்டணம் ரூ.295 (ரூ.290), மாதாந்திர கட்டணம் ரூ.6,605, (ரூ.6,410), வணிக வாகனங்களின் ஒருவழி பயணக் கட்டணம் ரூ.100 (ரூ.95) என உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெளிவட்டச் சாலை பயன்பாட்டுக்கு வந்த ஒரே வாரத்துக்குள் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆணையத்தின் உத்தரவுப்படி கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
English Summary
Motorists shocked by toll hike on newly opened Madurai Outer Ring Road