"சென்னை-கோவை-தூத்துக்குடி தொழில் தட விரைவுச்சாலை!": நெடுஞ்சாலைத் துறையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிரடி அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அதிவேக விரைவுச் சாலைகள், கடல்வழி உள்கட்டமைப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கிய விரைவுச் சாலைகள் & உயர்மட்டப் பாலங்கள்
தொழில் தட விரைவுச் சாலை: சென்னை - கோவை - தூத்துக்குடியை இணைக்கும் புதிய அதிவேகத் தொழில் தட விரைவுச் சாலை (Industrial Corridor Expressway) உருவாக்கப்படும்.

சென்னை-புதுச்சேரி கடல்வழிச் சாலை: சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்டச் சாலைத் தொடர், மும்பை - நவி மும்பை கடல் இணைப்புச் சாலையைப் போலக் கட்டம் கட்டமாக அமைக்கப்படும்.

சென்னையில் உயர்மட்டச் சாலை: சென்னையின் கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை புதிய உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்.

சென்னையில் முக்கோண வழித்தடம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.400 கோடி மதிப்பில் முக்கோண வழித்தடச் சாலை அமைக்கப்படும்.

வடசென்னை மேம்பாலம்: வடசென்னையில் பெருகி வரும் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வியாசர்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் & சாலை மேம்பாடு
தேசிய நெடுஞ்சாலைகள் விரைவுமயமாக்கல்: சென்னை - கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகள் மேம்பாடு, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்டச் சாலை உள்ளிட்ட திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.

வெற்றி எம்.எல்.ஏ சாலை மேம்பாட்டுத் திட்டம்: சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதிகளுக்கான சிறப்புச் சாலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இருவழிப் பாதைகளாக மாற்றம்: மாநிலம் முழுவதும் உள்ள 45,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் இருவழிப் பாதைகளாகத் தரம் உயர்த்தப்படும்.

சீரான சாலைகள் திட்டம்: 'நம்ம சாலை' செயலியின் மேம்பாட்டை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டம் ரூ.250 கோடி மதிப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.

கடல்வழிப் பயணிகள் படகுப் போக்குவரத்து
சென்னை - புதுச்சேரி படகுச் சேவை: சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கடல்வழிப் பயணிகள் படகுப் போக்குவரத்துச் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாம்பன் டூ அக்னி தீர்த்தம்: பாம்பன் முதல் அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகுப் போக்குவரத்துச் சேவை தொடங்கப்படும்.

நாகை - காங்கேசன்துறை: நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையிலான சர்வதேசப் படகுப் போக்குவரத்துச் சேவை மேலும் விரிவுபடுத்தப்படும்.

சாலைப் பாதுகாப்பு & விதிக் கட்டுப்பாடுகள்
கடுமையாகும் சாலை விதிகள்: சாலை விபத்துகளை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் வீதிச் சட்டங்கள் மற்றும் விதிகள் மேலும் கடுமையாக்கப்படும்.

ரூ.500 கோடியில் கண்காணிப்புக் குழு: சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் விபத்துகளைக் கண்காணிக்கவும் ரூ.500 கோடி நிதியில் சாலைப் பாதுகாப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.

பேட்ச் ஒர்க் ஊழல் தடுப்பு: நெடுஞ்சாலைகளில் பேட்ச் ஒர்க் (Patchwork) பணிகளுக்கு மட்டும் அதிகளவில் செலவு செய்யப்படுவதாகவும், அதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Aadav Arjuna Announces Multi-Corridor Expressways Coastal Elevated Roads and Ferry Services in TN Assembly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->