சத்தியமங்கலம் அருகே பள்ளி காலை உணவில் ரசாயனம் கலந்த நபர் கைது: ஆசிரியை சமயோசிதத்தால் 51 குழந்தைகள் உயிர் தப்பினர்!
Man Arrested for Mixing Chemical in School Breakfast Alert Teacher Saves 51 Children
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ராமமையனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவில் ரசாயனப் பொடி கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பள்ளியின் சமையல் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் சமீபத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் ஆறுமுகம் என்பவர், பள்ளி நிர்வாகம் மீது பழிவாங்கும் நோக்கத்துடன் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகள் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்பட்ட காலை உணவுச் சாம்பாரில், தரைக்கு மொழுகப் பயன்படுத்தப்படும் ஆபத்தான கெமிக்கல் பவுடரை அவர் ரகசியமாகக் கலந்துள்ளார்.
உணவு தயாரிக்கப்பட்ட பிறகு, மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்பாக வழக்கம்போல பள்ளியின் ஆசிரியை உணவை ருசித்துப் பார்த்துள்ளார். அப்போது சாம்பார் வழக்கத்திற்கு மாறாகக் அதிக கசப்புத் தன்மையுடன் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த ஆசிரியை, உடனடியாக உணவு விநியோகத்தைத் தடுத்து நிறுத்தினார். ஆசிரியையின் இந்த உடனடி மற்றும் சமயோசிதமான நடவடிக்கையால், உணவை உட்கொள்ளவிருந்த 51 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் அசம்பாவிதம் எதுவுமின்றிப் காப்பாற்றப்பட்டன.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சாம்பாரில் ஆபத்தான தரை மொழுகும் கெமிக்கல் பவுடர் கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையெடுத்து, இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட ஆறுமுகத்தைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். பள்ளி நிர்வாகப் புகாரின் பேரில் அவர் மீது சட்டப்படியான வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Man Arrested for Mixing Chemical in School Breakfast Alert Teacher Saves 51 Children