சாக்லேட் கொடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை - புகாரால் சிக்கிய வாலிபர்.!
man arrested for harassment in chennai thiruvanmiyur
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஏழு வயதுடைய பள்ளி மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், “தனது 7 வயது மகள் தினமும் வீட்டுக்கு வெளியே அவரது சக நண்பர்களுடன் விளையாட செல்வது வழக்கம்.
அதன் படி நேற்று முன்தினம் விளையாட சென்ற மகள் அழுதுக்கொண்டே வீட்டிற்கு வந்தார். இது குறித்து அவரிடம் விசாரித்த போது, 4ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் சிலரை அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் சாக்லேட் தருவதாக கூறி அழைத்து சென்றதாகவும், அங்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாக்லேட் கொடுத்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தன்னிடம் கூறியதாகவும்” தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் பல மாதங்களாக சாக்லேட் தருவதாக கூறி 7வயது முதல் 10 வயது வரை உள்ள மூன்று சிறுமிகளை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். மேலும், போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர்.
அதன் படி போலீசார் அடையாறு மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த யோவான் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், யோவான் தாய், தந்தையை இழந்து தனிமையில் வாழ்ந்து வருவதும், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் யோவானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளி குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for harassment in chennai thiruvanmiyur