பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Petrol disel price hike issue
பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.90, டீசல் ரூ.95.47, இயற்கை எரிவாயு ரூ.91.50 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
அமெரிக்க - ஈரான் போர் காரணமாக ஹோர்மஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டு வர முடியாததால், அதன் விலை50%க்கும் கூடுதலாக உயர்ந்திருப்பதையும், அதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதால் தான் வேறு வழியின்றி எரிபொருள்கள் விலை உயர்த்தப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்திருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது வருத்தம் அளிக்கிறது.
பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Petrol disel price hike issue