டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்ற செயலாக கருத முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! - Seithipunal
Seithipunal


 'டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை, குற்ற செயலாக கருத முடியாது' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதோடு, மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம், மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடலுார் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தி, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தனர் என கூறி மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த முருகானந்தம், மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது, சேத்தியா தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, சிதம்பரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முருகானந்தம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'உள்ளூர் பகுதி மக்களின் நலன் கருதி போராட்டம் அமைதியான முறையில் நடந்தது என்றும், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. யாரும் இது  தொடர்பில் புகார் கொடுக்க்கவில்லை. இருப்பினும், போலீசாரே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால், காவல்துறை தரப்பில், 'சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் எந்த அனுமதியும் பெறாமல் போராட்டம் நடத்தப்பட்டதாகவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் மதுபானக் கடைகள் ஏற்படுத்தும் சமூக பிரச்னை குறித்து, பொது மக்கள் அமைதியாக நடத்தும் போராட்டங்களை குற்றச்செயலாக கருத முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் பிரசாரங்களின் போது, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதாக, வாக்குறுதிகளை அளித்தாலும், உண்மையில் கடைகளை மூடுவதற்கு பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றுவதால் முக்கிய பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் எதிராக, காவல்துறை குற்றவியல் வழக்குகளை பதிவு செய்தால், அது ஜனநாயக உரிமைக்கு எதிரானதாகும் என்றும் நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டம், அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்டது என்றும், போராட்டங்கள் அமைதியாகவும், வன்முறையற்றதாகவும் தொடர்ந்தால், பொது மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த முடியும் என்றும், அரசிடமிருந்து உரிமைகளை கேட்கவும் முடியும். என்றும், குறிப்பிட்டுள்ளதோடு, சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High Court rules that protest against TASMAC shop cannot be considered a criminal act


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->