ரோபோ சங்கரின் மறைவுக்கு பிறகு புதிய வாழ்க்கை தொடங்கிய பிரியங்கா – குவியும் ரசிகர்கள் வாழ்த்து! 
                                    
                                    
                                   Priyanka starts a new life after Robo Shankar death fans flock to congratulate her
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ் திரையுலகை உலுக்கிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு, குடும்பத்தினரையும் ரசிகர்களையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால், இப்போது அவரது மனைவி பிரியங்கா தன்னுள் இருக்கும் துயரத்தை தாண்டி புதிய வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துகளையும் உற்சாகத்தையும் தெரிவித்துவருகிறார்கள்.
ரோபோ சங்கர், சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தனது நகைச்சுவை திறமையால் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். மிமிக்ரி, டைமிங் சென்ஸ், தனித்துவமான காமெடி பாணி ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார். நடனக் கலைஞர் பிரியங்காவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், இவர்களுக்கு இந்திரஜா என்ற மகளும் உள்ளார்.
சங்கரின் திறமையை முதலில் கவனித்தவர் நடிகர் தனுஷ். மாரி படத்தில் “சனிக்கிழமை” எனும் கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான சங்கர், தொடர்ந்து வாயை மூடி பேசவும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஸ்வாசம், தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அவருடைய கேரக்டர் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், ரசிகர்களின் நினைவில் நிற்கும் வகையில் நடித்தார்.
இருப்பினும், குடிப்பழக்கத்தால் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சையால் மீண்டு வந்த அவர், அதன் பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். தீய பழக்கங்களைத் துறந்து, மீண்டும் சினிமாவில் கவனத்துடன் செயல்பட்டு வந்தார். மகளுக்கான திருமணத்தையும் கடந்த வருடம் பிரமாண்டமாக நடத்தி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
ஆனால், ஒரு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகையே துயரத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக இறுதி ஊர்வலத்தின் போது, கணவன் மறைவால் துவண்டு அழுதபடி நடனமாடிய பிரியங்காவின் காட்சி, அனைவரின் மனதையும் உருக்கியது.
இந்நிலையில், தன்னுள் இருக்கும் துயரத்தை மறைத்து, வாழ்க்கையில் புதிய துவக்கத்தை மேற்கொண்டிருக்கிறார் பிரியங்கா. ‘ருசி நேரம்’ என்ற புதிய சமையல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். யூடியூப் தளத்தில் வெளியாகவுள்ள இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்கவிருக்கிறார். இதில் பிரியங்கா தனது கைப்பக்குவமான உணவுகளை சமைத்து, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள், “சோகத்தை தாண்டி தைரியமாக புதிய வாழ்க்கை தொடங்கியிருப்பது பெருமைக்குரியது” என கூறி, பிரியங்காவுக்கு வாழ்த்துகளை மழையாகப் பொழிந்துவருகிறார்கள்.
ரோபோ சங்கரின் நினைவுகளை மனதில் நிறுத்திக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் வாழ்வை முன்னேற்றும் பிரியங்காவின் இந்த புதிய முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Priyanka starts a new life after Robo Shankar death fans flock to congratulate her