வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை மையம் தகவல்.!
low pressure formed in bay of bengal meteorological department info
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இன்று காலை இந்திய பெருங்கடலில் உள்ள கிழக்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டி இருக்கும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது.
வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
இது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 31-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வருகிற 1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையும்.
இதன் காரணமாக, வரும் 29-ம் தேதி வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல், வருகிற 30-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
low pressure formed in bay of bengal meteorological department info