இன்று முதல் அமலுக்கு வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம்.!
Looking for you in your town scheme start from today
தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையில்லாமல் விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம் சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று ஆட்சியர்கள் தலைமையில் நடைபெறும்.
இன்று தொடங்கும் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று 24 மணி நேரம் அங்கு தங்க உள்ளனர். இந்த திட்டத்தின்படி ஆட்சியர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்கியிருப்பர்.
அங்கு பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் கலெக்டர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளனர்.
மேலும், ஆட்சியர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Looking for you in your town scheme start from today