ஆருத்ரா தரிசன திருவிழா :: கடலூர் மாவட்டத்திற்கு ஜன.6ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!
Local holiday for Cuddalore Dist on Jan6 arudra festival
கடலூர் மாவட்டத்தை அடுத்த சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனம் ஆகும். சிவபெருமான் சேந்தனார் வீட்டிற்கு களி உண்ண சென்ற மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளை குறிக்கும். அந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த டிசம்பர் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகளின் வீதி உலா தினமும் நடைபெற்று வருகிறது. நாளை சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தில் பஞ்ச மூர்த்திகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வீதி உலா வர உள்ளனர்.

இதனை அடுத்து நாளை மறுநாள்(ஜன.6) திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது. அப்பொழுது நடராஜர் மற்றும் சிவகாமி சுந்தரி நடனமாடி படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிவார்கள். இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு நாளை மறுநாள்(ஜன.6) உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Local holiday for Cuddalore Dist on Jan6 arudra festival