பன்றி காய்ச்சல் பரவல்; கேரளா - தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்த கோரிக்கை..!
Demand to intensify surveillance at the Kerala and Tamil Nadu border due to the spread of swine flu
கேரள மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகின்ற நிலையில், குளிர்ச்சியான சூழல் காரணமாக நோய் அதிகம் பரவ வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் தினமும் பணி நிமித்தமாக போடி அருகே போடிமெட்டு, கம்பம் மெட்டு, ராமக்கல் மெட்டு, குமுளி வழியாக கேரளா சென்று வருகின்றனர்.
அத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் லாரிகள், சரக்கு வாகனங்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், தமிழ்நாடு - கேரள இடையே அரசு பஸ்களும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப்பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து போடி பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாவது;
போடிமெட்டு, கம்பம் மெட்டு, குமுளி போன்ற பகுதிகளுக்கு அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இன்னும் பலர் இந்த நோய் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாகவும், கேரளாவில் இருந்து தினமும் ஏராளமானோர் தமிழகம் வந்து செல்வதாகவும் கூறியுள்ளனர்.
அதேப்போன்று தமிழக தொழிலாளர்களும் அங்கு வேலைக்கு செல்கின்றனர். எனவே, கேரள - தமிழக எல்லை பகுதியில் மாவட்ட சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து சுகாதார நடவடிக்கைளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன், கேரளாவில் இருந்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும், உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Demand to intensify surveillance at the Kerala and Tamil Nadu border due to the spread of swine flu