வாடகை வீட்டை காலி செய்வதில் தகராறு ; சிமென்ட் கல்லால் தாக்கி உயிரிழந்த வீட்டு உரிமையாளர்; குற்றவாளிகள் 03 பேருக்கு ஆயுள் தண்டனை..!
Life imprisonment for 3 accused in the case of a homeowner who died in a dispute over vacating a rented house
கடந்த 2013-ஆம் ஆண்டு, சென்னையில் வீட்டின் உரிமையாளரை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் பூந்தமல்லியை சேர்ந்த பிரபு, கோட்டீஸ்வரன் ஆகியோருக்கு வீடு உள்ளது. இந்த வீட்டை கண்ணகி ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். வீட்டின் வாடகை வசூலிப்பு, பராமரிப்பு போன்ற பணிகளை கோட்டீஸ்வரன் என்பவர் பார்த்து வந்துள்ளார்.
நாளடையில் இந்த வீட்டில் வாடகைக்கு இருந்த கண்ணகி ஆறுமுகத்துக்கும், கோட்டீஸ்வரனுக்கும் இடையே வாகனம் நிறுத்துவது, கூடுதலாக குடிநீர் கேட்பது போன்ற விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதால் வீட்டை காலி செய்யுமாறு கோட்டீஸ்வரன், கண்ணகி ஆறுமுகத்திடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் கண்ணகி ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி கண்ணகி ஆறுமுகத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான சிலம்பரசன் (23), ரஹ்மான் (23), ராஜ் (23) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் வீட்டின் முன்பு படுத்திருந்த கோட்டீஸ்வரனின் தலையில் சிமென்ட் கல்லால் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த கோட்டீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சிலம்பரசன், ரஹ்மான், ராஜ், சிறுவன் உள்பட நான்கு பேர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில், தொடர்புடைய ஒருவர் சிறுவன் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஏனைய 03 பேர் மீதான வழக்கு, சென்னை 04-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் போலீசார் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜரானார்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, உறவினரை வீட்டை விட்டு காலி செய்ய கூறியது தொடர்பாக தலையில் கல்லால் தாக்கி கொலையான கோட்டீஸ்வரனை, கடந்த 2012-இல் குற்றவாளிகள் மூவரும் தாக்கி வலது கையை உடைத்துள்ளனர். இதுகுறித்து உயிரிழந்த நபர் அப்போதே போலீசில் புகார் அளித்துள்ளார்.
அத்துடன், முன் பகை காரணமாக கோட்டீஸ்வரனை கொலை செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றவாளிகள் 03 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்துள்ளார்.
English Summary
Life imprisonment for 3 accused in the case of a homeowner who died in a dispute over vacating a rented house